Monday 23 October 2017

தீப ஒளித்திருநாள்

தீப ஒளித்திருநாள்

வத்திக்கான் வானொலி நேகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொட்டாடப்படும் இந்துப் பண்டிகையாகும். தீபாவளி என்ற சொல்லை தீப, ஆவளி என்று பிரித்து பொருள் கொள்வர். தீபம் என்றால் ஒளிவிளக்கு. ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் அகற்றி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி என்பர். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள்தருவதாய் ஐதீகம். இவ்விழா அடிப்படையில் இந்துப்பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் விழா. தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல புராண கதைகளுண்டு.

            இரமான் 14 வருட வனவாசம் முடித்து நாடு திரும்பும்போது மக்கள் விளக்கேற்றி வரவேற்ற நிகழ்வை தீபாவளியாக கொண்டாடுகிறார்கள் எனவும், மக்களை கொடுமைப் படுத்திக்கொண்டிருந்த நரகாசுரன் என்ற அரக்கனை, கிருஷணன் கொன்ற நாளை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக கொண்டாடுகிறார்கள் எனவும், ஸ்கந்த புராணத்தின்படி சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்ற நாள் தீபாவளியாக கொண்டாடப்படுவதாக புராண கதைகள் சொல்கின்றன.  மேலும் இவ்விழா இந்து ஆண்டின் தொடக்கத்தில் வருவதால், ஆண்டு முழுவதும் செல்வ செழிப்போடு வாழ, செல்வத்தின் கடவுளாகிய சரஸ்வதியை வேண்டும் திருநாள் எனவும் குறிப்பிடுவர்.  தீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ  கொளுத்துவது, புத்தாடைகள் உடுத்துவது, பலகாரங்கள் மற்றும் இனிப்பு வகைகள் உண்பது  மற்றும் மற்றவர்களோடு பரிமாறுவது, மற்றும் நல்ல அறுசுவை சைவ உணவு உண்பது இவ்விழாவின் சிறப்பு.

    கத்தோலிக்க திருச்சபை இவ்விழாவை ஒளியின் விழாவாக கொண்டாடுகிறது. தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று, இருள் பரவியிருந்தது. அப்போது, 'கடவுள், ஒளி தோன்றுக' என்றார். ஒளி தோன்றிற்று' என்று தொடக்கநூல் முதல் அதிகார முதல் மூன்று வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்விழா உலகிற்கு ஒளியேற்றிய தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகின்ற ஒருவிழாவாக அமைகிறது.
தூய யோவான் தனது முதல் திருமுகத்திலே (1 யோவான் 1:5-7) கூறுவார் 'கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்துகொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; மாறாக அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம்' என குறிப்பிடும் தூய யோவான் நமது வாழ்வு ஒளியில் நடக்க ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
நேற்று, தீபாவளி வாழ்த்து செய்தியாக வத்திக்கான் வெளியிட்டச் செய்தியில், கலாச்சாரங்கள் மற்றும் பழக்கவழக்கங்களின் பன்மைத்தன்மையை, உண்மையாகவே மதித்து போற்றுவதன் வழியாக, ஒற்றுமையும் நலமும் நிறைந்த ஒரு சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும் என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவை கூறியுள்ளது. எனவே இவ்விழா நட்புறவையும், ஒற்றுமையையும் எற்படுத்தும் விழாவாக அமைய தாய்திருச்சபை நம்மை அழைக்கிறது.

ஒளியின் விழாவைக் கொண்டாடும் இந்நாளிலே, ஒளியாம் இறைவனை உலகிற்கு கொடுக்க, நாம் அழைக்கப்பட்டுள்ளோம். யோவான் நற்செய்தி 8:12-13-ல் இறைமகன் இயேசு கூறுவார், 'உலகின் ஒளி நானே: என்னைப்பின் தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்.'
ஒளியின் விழாவைக் கொண்டாடும் இந்நாளில், எவ்வாறு ஒளியானது இருளகற்றி, வாழ்வுக்கு வழிகாட்டுகின்றதோ, அதேப்போன்று நாமும் இயேசுவின் ஒளியில், வழியில் அவரை பின்தொடர அழைக்கப்பட்டிருக்கிறோம். இதனையே மிக அழகாக, அருமையாக தூய பவுலடியார் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் (5:8) குறிப்பிடும்போது சொல்வார்; ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளிபெற்ற மக்களாக வாழுங்கள். மேலும் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் குறிப்பிடும்போது (உரோமையர் 13:12) இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலன்களை அணிந்து கொள்வோமாக என்று பலுலடியார் அறிவுறுத்துவார். ஒளியின் ஆட்சிக்குரிய செயல்களைப்பற்றி குறிப்பிடும் போது மத்தேயு 5:16 -ல் இயேசு குறிப்பிடுவார், உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். நமது செயல்கள் நற்செயல்களாக, சமூகத்திற்கு நன்மை விளைவிப்பதாக இருந்தால், மக்கள் நம்மை படைத்த, இறைவனைப் போற்றி புகழ்வார்கள். நமது நற்செயல்கள் இன்றைய சமூக சூழ்நிலையில் எத்தகையதாக உள்ளது?
ஒருசில நாள்களுக்கு முன்னால் திபாவளியை மையப்படுத்தி ஒரு குறும்படம் Facebook-ல் வெளிவந்தது என்னை சிந்திக்க வைத்தது. ஒரு நடுத்தர குடும்பம். குடும்பத்தலைவர், குடும்பதலைவி மற்றும் அவர்களுக்கு ஒரு குழந்தை. குடும்ப தலைவர் ஒரு சிறிய துணிகடை வைத்து குடும்பத்தை வழிநடத்தி வருகிறார். திபாவளி காலகட்டத்தில் அதிக வியாபாரம் நடக்கும், திபாவளியை சிறப்பாகக் கொண்டாடலாம் என்று நினைத்தார். ஆனால் பெரிய, பெரிய மால்களிலும், பெரிய அடுக்குமாடி ஜவுளி கடைகளிலும் துணி எடுக்கின்ற பழக்கம் நடுத்தர மற்றும் ஏழை மக்களிடம் அதிகரித்துள்ளதால், இச்சிறிய துணிகடையில் வியாபாரமில்லை. கடன்வாங்கி திபாவளி பண்டிகையை கொண்டடவும் துணிவில்லை. ஆசையாக வளர்த்த தனது மகனுக்கு பட்டாசுகள் வாங்கிக்கொடுக்கவோ, சுவையான பலகாரங்களை சமைக்கவோ, திபாவளி நாளில் சுவையான உணவை உண்ணவோ வழியில்லாமல் குடும்பம் தவிக்கிறது. குடும்ப தலைவர் என்ன செய்வது என்று தெரியாமல் வேதனைப்படுகிறார். இதனை கவனித்துக்கொண்டிருந்த, வேலைக்கு செல்கின்ற ஒரு சகோதரி இக்குடும்பம் திபாவளி விழாவை மகிழ்ச்சியாக கொண்டாட ஒருசில சேலைகளை விலைக்கு வாங்குகிறார். குடும்ப தலைவரின மனதில் மிகப்பெரிய ஆனந்தம், மகிழ்ச்சி.
ஒரு சகோதரி இன்னொரு குடும்பத்தின் மீது அக்கரைக்கொண்டு அவர்களும் தீபாவளி விழாவைச் சிறப்பிக்க வேண்டும் என்பதற்காய் சிறு தியாகம் செய்கிறார். இன்னொரு குடும்பமும் மகிழ்ச்சியாக திபாவளியை கொண்டாடுகிறது.  இக்குறும்படம் இன்றைய நடுத்தர குடும்பங்களின், சிறுவிவசாகிகளின், சிறுவியாபாரிகளின், கைத்தறி நெசவாளர்களின் பொருளாதார சூழ்நிலையை சுட்டிக்காட்டுகிறது.  நம்முடைய சமூகத்தில் அதிகமாக வாழுகின்ற இந்த ஏழைவிவசாகிகள், வியாபாரிகள், நெசவாளர்கள், மீனவர்கள் மற்றும் பல்வேறு தொழில்களை செய்பவர்களுக்கு நம்முடைய நற்செயல்கள் வழியாக  இறையொழியை ஊட்ட அழைக்கப்பட்டுள்ளோம்.

அதேநேரத்தில் யோவான் 3:19-ல் குறிப்பிடுவது போல, ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால், மனிதர் ஒளியைவிட இருளையை விரும்பினர். பல நேரங்களில் நடுத்தர ஏழை குடும்பங்களும் திபாவளி பண்டிகையைக் கொண்டாட பெரிய பெரிய மால்களிலும், பெரிய பெரிய ஜவுளி கடைகளுக்கும், Supermarket-க்கும் செல்வதால், சிறுவியாபாரிகள், விவசாகிகள் நெசவாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். இது உழைக்கின்ற பல மனிதர்களை, பல குடும்பங்களை பாதிக்கிறது.
ஒருமாதத்திற்கு முன்னால் சமூக வலைதளத்தில் வெளிவந்த மற்றொரு செய்தியை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். இது ஒரு புகைப்படம்.  வயது முதிர்ந்தவர் பனைக்கிழங்குகளையும், காய்கறிகளையும் விற்றுக் கொண்டிப்பதுப்போன்ற புகைப்படம். அப்புகைப்படத்தில் எழுதப்பட்டிருந்தது. இத்தகையோரிடம் விலைபேசாதீர்கள். ஏனெனில், இவர் இந்த சிறிய வருமானத்தில் தான் வாழ்கிறார் என்று.
திபஒளி மாலை நேரத்திலே அழகிற்கும், இருளை அகற்றுவதற்கும் மட்டுமல்லாமல், நமது அயலானின் வாழ்வில் ஒளியை ஏற்ற நாம் உதவ வேண்டும் என்பது இப்புகைப்படம் தரும் செய்தி. தூய யோவான் 12:46 கூறுவதுபோல, இயேசுவில் நம்பிக்கை கொள்வோர் இருளில் இராதபடி நாம் ஒளியாக உலகிற்கு செல்ல அழைக்கப்பட்டுள்ளோம்.
இன்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மீனவர் பிரச்சினைகள், மற்றும் மீத்தேன் திட்டத்தால் அதிகரித்துவரும் விவசாய பிரச்சனைகள், பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறை பிரச்சனைகள், சாதி மற்றும் ஆணவ படுகொலைகள், தனியார் மயமாக்கும் கல்விக்கொள்கையால் அதிகரித்துவரும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள், அடிப்படை கல்வியின்மை, வேலைவாய்பின்மை, மதுபான கடைகளால், மதுநோயினால் அதிகரிக்கும் தந்தையில்லா குடும்பங்கள் மற்றும் தந்தையிருந்தும் பயனற்ற குழந்தைகள்.
இந்த நாட்களில் பட்டாசுகளால் அதிகமாக ஏற்படுகின்ற காற்று மற்றும் சுகாதார மாசுபாடு. கழிந்த ஆண்டு, இந்த நாள்களில், டெல்லி போன்ற நகரங்களில் மனிதன் சுவாசிக்க ஏற்ற காற்றை விட 10 மடங்கு காற்று மாசுபட்டுள்ளது என உலக சுகாதார அறிக்கைக் கூறிப்பிடுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் உலகிற்கு ஒளியாய் ஒளிர இறைவன் நம்மை அழைக்கிறார். திபாவளியன்று, மாலையில் தீபங்களை ஏற்றும்போது, நமது மனதில் ஒளியேற்றுவோம். நமது வாழ்வு, முதலாவதாக, நமது குடும்பத்திற்கு ஒளியாக, இருளை அகற்ற உதவும் எனவும், இரண்டாவதாக நமது முயற்சிகள், வழிகாட்டுதல்கள் சமூகத்தின் இருளை அகற்ற உதவும் என உறுதி எடுப்போம். திபாவளி திருநாள் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்று, இருளை ஒளி வெற்றிக்கொண்ட இந்நாளில் திபாவளி விழாவை கொண்டாடும் அனைத்து சமய சகோதர, சகோதரிகளும் எல்லா வழங்களும் பெற்றுவாழ வத்திக்கான் வானொலி சார்பாகவும் என் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.